டெசோ தீர்மான விளக்க மாநாடு.. அம்பத்தூரில் கருணாநிதி, மதுரையில் குஷ்பு பேசுகின்றனர்
இது குறித்து தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 12-ந் தேதி சென்னையில் டெசோ அமைப்பு சார்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், கலைஞரின் அறிவிப்பிற்கு இணங்க 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தந்த மாவட்ட கழக செயலாளர்கள் எழுச்சியுடனும் - சிறப்புடனும் நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வருகிற 25-ந் தேதி அம்பத்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பேசுகிறார். 25-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 26-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசுகிறார்.
26-ந் தேதி நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், 23-ந் தேதி தர்மபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் துரைமுருகனும், 25-ந் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யும் பேசுகிறார்கள்.
24-ந் தேதி நீலகிரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சுப்புலெட்சுமி ஜெகதீசனும், 21-ந் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகரும், 23-ந் தேதி மதுரை மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்புவும் பேசுகிறார்கள்.
20-ந் தேதி அரியலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகர் குமரிமுத்து மற்றும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. முன்னணி தலைவர்கள் பேசுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.