போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சிக்கினார்
வேலூர்: வேலூர் மாநகராட்சி 4வது வார்டு திமுக கவுன்சிலர் ரவிக்குமார், தேர்தலின் போது போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்தது போட்டியிட்டது உறுதியாகி உள்ளதால், அவரது பதவி விரைவில் பறிக்கப்பட உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், வேலூர் மாநகராட்சி 4வது வார்டு, இந்து ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திமுகவை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் குமார், கடந்த 2011 நவம்பர் 2ம் தேதி, மாநில தேர்தல் கமிஷனுக்கு ஒரு புகார் மனு அனுப்பினார்.
இதில் ரவிக்குமார் இந்து ஆதி திராவிட அல்ல. அவர் ஆதி திராவிடக் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். போலி ஆவணங்களை அளித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளார். எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. மாவட்ட கலெக்டரின் விசாரணையில் ரவிக்குமார் மீதான புகார் உண்மையானது என்று தெரியவந்தது. மேலும் ரவிக்குமாரை தகுதி நீக்கம் செய்ய மாநில தேர்தல் கமிஷனுக்கு, மாவட்ட கலெக்டர் அஜய் யாதவ் பரிந்துரைத்தார்.
இதையடுத்து திமுக கவுன்சிலர் ரவிக்குமார் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு தேர்தல் கமிஷன் கடந்த 6ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து விரைவில் கவுன்சிலர் ரவிக்குமார் மீது அதிரடி நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications