2 கற்பழிப்பு மற்றும் 2 கொலை... 20 ஆண்டுக்குப் பின் சிக்கிய 'குக்'!
கோலார்: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இரண்டு பெண்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்த சமையல்காரர், 20 ஆண்டு தலைமறைவுக்குப் பின்னர் போலீஸில் சிக்கியுள்ளார்.
கோலார் மாவட்டம் கல்லூர் என்ற கிராமத்தில் 1993ம் ஆண்டு ரத்தினம்மா என்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அதேபோல சென்னப்பள்ளி கிராமத்தில் பத்மம்மா என்ற பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு செயல்களையும் செய்தது சீனா என்கிற சமையல் தொழிலாளிதான் என்று தெரிய வந்தது.
அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சீனா சிக்காமலேயே இருந்து வந்தார். கடந்த 20 வருடங்களாக சீனாவைத் தேடும் வேட்டை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆந்திராவில் உள்ள ஹோட்டலில் சீனா சமையல் வேலை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு அவர் ஸ்ரீனிவாசப்பூர் என்ற இடத்திற்கு அருகே ஒரு ஹோட்டலில் இருந்ததும் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் சீனாவை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
25 வயதில் பலாத்காரம், கொலையைச் செய்து விட்டுத் தப்பிய சீனாவுக்கு தற்போது 45 வயதாகிறது.