இதயத்தில் அடைப்பு: விவசாயத் துறை அமைச்சர் தாமோதரனுக்கு அறுவை சிகிச்சை
சென்னை: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் தாமோதரனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
தமிழக விவசாயத்துறை அமைச்சர் தாமோதரன்(60) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கி அரசு அலுவல்களைப் பார்த்து வந்த அவருக்கு நேற்று காலை 6 மணி அளவில் திடீர் என்று கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவரது இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.