தர்மபுரியில் துண்டுகளாக அறுக்கப்பட்ட இறந்த வாலிபர் உடல்-சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்
தர்மபுரி: தர்மபுரியில் 30 வயது மதிக்கத்தக்க இறந்த வாலிபரின் உடல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. உடலில் தலை, கை, கால் ஆகிய உறுப்புகள் இல்லாததால், கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பைசுஅள்ளி பகுதியில் சாலையோரத்தில் பழத்தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தின் அருகே சாக்குமூட்டை ஒன்று, போர்வை போர்த்தப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக கிடந்தது. சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதால், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாக்குமூட்டையை திறந்து பார்த்தனர். அப்போது சாக்குமூட்டையில் துண்டு துண்டாக அறுக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் உடல் பகுதிகள் இருந்தது. தலை, 2 கைகள், வலது கால் ஆகிய உறுப்புகள் இல்லாததால், கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது தெரியவில்லை.
30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர், எதற்காக கொலை செய்யப்பட்டார்? எந்த ஊரை சேர்ந்தவர்? சாக்கு மூட்டையை அங்கே கொண்டு வந்து போட்டது யார்? உடலின் தலை மற்றும் மற்ற பகுதிகள் எங்கே? ஆகியவை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபரை விரைவில் கண்டறிய கூடாது என்பதற்காக, அவரது உடலை துண்டு துண்டாக அறுத்துவிட்டு, தலை மற்றும் கை, கால் ஆகிய பகுதிகளை வேறு இடங்களில் எறிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து காரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications