குப்பைத் தொட்டியாக மாறி நாறிப் போன 'தோட்ட நகரம்' பெங்களூர்!
பெங்களூர் வீதிகளில் ஆங்காங்கே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக கர்நாடக மாநில துணை முதல்வர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார். சில இடங்களில் குப்பைகளை அகற்ற போலீசாரை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள குப்பைகளை எல்லாம் மாநகராட்சி ஊழியர்கள் அதாவது துப்புரவு தொழிலாளர்கள் சேகரி்த்து அதை எலஹங்கா அருகே உள்ள மாவள்ளிபுரா, ஹோஸ்கோட் அருகே உள்ள மந்துரு மற்றும் தொட்டபல்லபுரா அருகே உள்ள டெர்ரா பிர்மா ஆகிய 3 இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குளில் கொட்டி வந்தனர். குப்பைகளை கொட்ட அந்தக் கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து மந்துரு மற்றும் டெர்ரா பிர்மா ஆகிய 2 இடங்களில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
மீதமுள்ள மாவள்ளிபுராவிலும் குப்பை கொட்ட கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூர் நகரில் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல குவியத் தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். அவர்கள் தங்கள் வேலையைத் துவங்கியபோதும் மாவள்ளிபுராவில் குப்பையைக் கொட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பெங்களூர் தெருக்கள் குப்பைக்காடாக காட்சியளிக்கின்றன.
எங்கு பார்த்தாலும் குப்பைகள் கிடந்ததால் நகரமே நாறிப் போய் விட்டது. இந்த நிலையில் வெந்த புண்ணில் விரலை விட்டு நோண்டிய கதையாக, நேற்று இரவு பெங்களூரில் சுமார் 2 மணி நேரம் பலத்த கனமழை பெய்தது. பேய் மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் தெருவோரம் இருந்த குப்பைகள் அப்படியே சாலைகளுக்கு வந்து விட்டன. கால் வைக்கக் கூட முடியாத அளவுக்கு நகரின் பல பகுதிகளில் நாறிப் போய்க் கிடக்கின்றன.
தெருக்கள்தோறும் இந்தக் குப்பை மழை நீருடன் கலந்து துர்நாற்றம் எடுத்துள்ளது.
இது குறித்து கர்நாடக துணை முதல்வர் ஆர். அசோகா கூறுகையில்,
குப்பைக் கிடங்குகள் உள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அங்கு சாலைகள் உள்ளிட்ட வசதி செய்ய ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன். குப்பைக் கிடங்குகளில் குப்பை கொட்ட பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.
ஆகஸ்ட் 23ல் இருந்து பெங்களூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாவள்ளிபுராவில் உள்ள கிடங்கில் தான் கொட்டப்படும் என்று அரசு அறிவித்தது. இதை எதிர்த்து மாவள்ளிபுரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 24 கிராமத்தினர் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து நேற்று அங்கு 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீசாரையும் மீறி கிடங்குகளுக்கு குப்பை லாரிகள் வரும் வழியில் கிராமத்தினர் திரண்டனர். அப்போது மாவள்ளிபுராவில் குப்பை கொட்டுவதை எதிர்த்து சுமார் 10 ஆண்டுகளாக போராடி வந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரின் மரணத்தால் போராட்டக்காரர்கள் ஆத்திரம் அடைந்தனர்.