அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆப்பு..பிடியை இறுக்கும் ஈடி! தமிழக அரசுக்கு பறந்த கடிதம்! விஜய் முடிவு என்ன?
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சரும் திமுக முக்கிய நிர்வாகியுமான அனிதா ராதாகிருஷ்ணனை குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை. அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செந்தில்பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு பல்வேறு திமுகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பழைய வழக்குகள், விசாரணைகள் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்து கொண்டிருக்கும் சூழலில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பியிருக்கும் கடிதத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உள்ள வழக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனிதா ராதாகிருஷ்ணன்
குறிப்பாக, சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை முன்னெடுக்க அனுமதி தேவைப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசின் அடுத்த கட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
செந்தில் பாலாஜி
அரசியல் வட்டாரங்களில் இது சாதாரண நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படவில்லை. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை நாடு முழுவதும் பேசுபொருளானது.
பணமோசடி வழக்கு
அதேபோல் தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பாகவும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பது, தமிழக அரசியலில் மீண்டும் பழிவாங்கும் அரசியல் படலம் தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. திமுக வட்டாரங்களும் இதனை ஏற்கனவே எதிர்பார்த்து தான் இருந்ததாக கூறப்படுகிறது. "எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து மத்திய அமைப்புகள் செயல்படுகின்றன" என்ற குற்றச்சாட்டை திமுக ஏற்கனவே பலமுறை முன்வைத்துள்ளது.
அமலாக்கத்துறை
மற்றொரு பக்கம், "சட்டத்தின் முன் அனைவரும் சமம். குற்றச்சாட்டு இருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக எந்த முடிவை எடுக்கிறது என்பது அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கப்படுமா? அல்லது சட்ட ரீதியான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால் இதுவரை அமலாக்கத்துறை அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் விரிவான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications