நாடாளுமன்றத்தை நடத்த விடுங்க... பதில் தர்றோம்.. விவாதிக்கலாம்: மத்திய அரசு அழைப்பு
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக விளக்கம அளித்தனர்.
மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் வாய்ப்பளிக்கவில்லை. நாடாளுமன்றத்தை வேண்டுமென்றே பாஜகவினர் முடக்கியுள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டினால் கணக்குத் தணிக்கை அறிக்கையின்படியான இழப்புத் தொகை என்பது உண்மை அல்ல. ஏனெனில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பல சுரங்கங்களில் நிலக்கரியே தோண்டி எடுக்கப்படவில்லை. பல சுரங்கங்களில் தோண்டி எடுக்கபட்ட நிலக்கரி விற்கப்படவும் இல்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக இருந்து வந்த நடைமுறைகளை மாற்றுவதற்கே பிரதமர் முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஊடகங்களும் இந்த விவகாரம் குறித்து நேர்மையான கருத்துகளையே வெளியிட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் உண்மையை விளக்கவும் எதிர்க்கட்சிகள் உண்மையை அறிந்துகொள்ளவும் நாடாளுமன்றத்தை செயல்படவிட வேண்டும். சுரங்க ஒதுக்கீட்டு முறையை மாற்றி ஏல முறைக்கு மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. 1993-ம் ஆண்டு முதல் ஒரே கொள்கைதான் இன்னமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் உண்மை என்ன என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார் அவர்.