மழை பெய்ய வேண்டி வனதிருப்பதி கோவிலில் வருணஜெப யாகம்: கருணை காட்டுவாரா வருண பகவான்?
திருச்செந்தூர்: பருவமழை பொய்த்துவிட்டதை அடுத்து மழை வேண்டி வனத்திருப்பதி கோவிலில் வருண ஜெப யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே இந்நிலை மாறும். எனவே, மழை வேண்டி பல்வேறு இடங்களில் யாகம் நடந்து வருகிறது.
இந்நிலையில் மழை வேண்டி புன்னைநகர் வனத்திருப்பதி கோவிலில் வருண ஜெப யாகம் நேற்று தொடங்கியது. இதையொட்டி 29 வேதவிற்பன்னர்கள் நாககன்னி அம்மன் கோவில் வழியாக யாகம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள ஹோட்டல் சரவணபவன் நிறுவனரும், கோயில் நிர்வாகியுமான ராஜகோபால் தலைமையில் காஞ்சி தொண்டை மண்டல ஆதினம் ஞானதேசிக பரமாச்சார்யா சுவாமிகள், பாலபிரஜாதிபதி அடிகள், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் முன்னிலையில் வருண ஜெப யாகம் துவங்கப்பட்டது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குளத்தில் காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த 9 பேரும், திருச்செந்தூர் திருசுந்தரர்கள் 21 பேரும் மழை பெய்ய வருண பகவானையும், இந்திரனையும் வேண்டி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வருண ஜெப யாகம் நடத்தினர். வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் இந்த யாகம் நடைபெறுகிறது.