தமிழக கவர்னர் அலுவலக அதிகாரிகளை கவர் பண்ணும் அமைச்சர்கள்?
சென்னை: தமிழக அமைச்சரவையில் எந்த நேரத்திலும் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவலின் மூலம் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் மவுசு அதிகரித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் உள்ள 7 அமைச்சர்கள் நீக்கப்படலாம் அல்லது துறை மாற்றப்படலாம் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து சக அமைச்சர்களுடன் விவாதிக்க முடியாது. அதேபோல மூத்த அமைச்சர்களிடமும் தகவல் கேட்டு பெற முடியாது என்பதால் அமைச்சர்கள் தவியாய் தவித்தனர்.
இந்த நிலையில் அமைச்சர்களுக்கு தற்போது புதிய யோசனை ஒன்று கிடைத்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அது குறித்த கோப்புகள் அனைத்தும் தமிழக ஆளுநர் அலுவலகம் மூலம் தான் தமிழக ஆளுநர் ரோசைய்யாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
எனவே தமிழக ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடம் நட்பு வைத்து கொண்டால், அங்கு வந்து செல்லும் ஆவணங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்பது சில அமைச்சர்களின் கணக்கு. இதற்காக ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்கள் வகிக்கும் பதவி, வசிக்கும் முகவரி, செல்போன் எண் போன்ற தகவல்களை அமைச்சர்கள் சேகரித்து வருகிறார்களாம்.
இதனால் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அவர்கள் சாதாரண கோரிக்கைகளை கூட உடனே செய்து கொடுக்க ஆட்கள் தயாராக உள்ளார்களாம். இந்த புதிய கூட்டணி சத்தம் போடாமல் பல 'சாதனை'களை செய்து வருகிறதாம்.