இந்தியாவுக்குப் போட்டியாக வடகிழக்கில் ராணுவத்தினருக்கு வீடு கட்டும் சீனா-இலங்கை அனுமதி
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அரசாங்கம் சார்பில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் அதே வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவையும் இலங்கை களமிறக்கியுள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு அடுத்த வாரம் கொழும்பு வருகிறது. இக்குழுவினர் இலங்கை ராணுவத்துக்கு பெருமளவு உதவிகளை வழங்க இருக்கிறது. குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் ராணுவத்தினருக்கு வீடுகளைக் கட்டித்தரவும் முகாம்களை சீரமைத்துத் தரவும் சீனாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் வடகிழக்கில் ரயில்சேவை, வீடமைப்பு திட்டம் போன்ற மறுவாழ்வுப் பணிகளை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. தமிழருக்கு இந்தியா உதவும் நிலையில் ராணுவத்தினருக்கு சீனா உதவ இலங்கை அனுமதி கொடுத்திருக்கிறது.
எத்தனையோ முறை இலங்கை தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் சீனாவுக்கு சென்றபோதும் இதுவரை எந்த ஒரு சீன பாதுகாப்பு அமைச்சரும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டது இல்லை. தற்போதுதான் முதல் முறையாக சீனாவி பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதை அரசியல் பார்வையாளர்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
இந்த பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு சீனா திரும்பிய பின்னர் வடக்கு கிழக்கில் தொழில்முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய 100 பேர் மிகப் பெரிய குழுவை இலங்கை அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications