4 சோதனைச்சாவடிகளைத் தாண்டி கேரளாவுக்கு தொடர்ந்து எரிசாராயம் கடத்தல்
நெல்லை: தமிழகத்தி்ன் எல்லை பகுதியான திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தி்ல் இருந்து பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வாகனங்கள் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் சென்று வருகிறது. தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்குவதால் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு நேற்று உப்பு லாரியில் சுமார் 240 கேன்களில் எரிசாராயம் கொண்டு சென்றுள்ளனர். புளியரை,ஆரியங்காவு, தென்மலை சோதனைச்சாவடிகளை கடந்து இந்த எரிசாராயம் திருவல்லா என்ற பகுதியில் பிடிபட்டது.
தமிழகத்தில் இருந்து புளியரை வழியாக கடத்தப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து ஆரியன்காவு மதுவிலக்கு சோதனைச்சாவடியில் இருந்த விஜிலன்ஸ் போலிசார் 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் நேற்று மாலை முதல் விஜிலன்ஸ் போலிசார் ஆரியன்காவு மதுவிலக்கு சோதனைச்சாவடியில் தீவீர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை சுமார் 6 மணியளவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மினி லாரி வந்தது. மீன் கழிவுகளை ஏற்றி வந்த அந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் சதீஷ் தப்பியோடினார். இதையடுத்து லாரியை போலீசார் முழுமையாய் சோதனை செய்தபோது அதன் உள்ளே 52 கேன்களில் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எரிசாராயத்தையும், லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றனர்.

இந்த சோதனை காரணமாக தமிழக, கேரள எல்லைப் பகுதியில் 16 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புளியரையில் போலீஸ், போக்குவரத்து, வணிகவரி, வனத்துறை ஆகிய நான்கு துறை சோதனைச்சாவடிகளை கடந்து கேரளாவுக்கு எரிசாராயம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நெல்லை காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களில் தொடர்ந்து எரிசாராயம் கடத்தல் நடந்தும் கண்டு கொள்ளாமல்விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications