தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே இன்று கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. ஆனால் தற்போது வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடையச் செய்தது.
சென்னை தவிர திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது. இதனால் ரோடுகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இது தவிர விடிய, விடிய தூறிக் கொண்டிருந்தது. நுங்கம்பாக்கத்தில் 9.8 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 82.9 மி.மீட்டர் மழையும் பதிவானது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் அடுத்த மாதம் இறுதி வரை இருந்தும் போதிய அளவு மழை பெய்யவில்லை. ஆனால் தற்போது வெப்ப சலனத்தால் பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது. இந்த மழை இன்றும் நீடிக்கும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் ஒரிசா அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது தமிழகம் நோக்கி நகர்ந்தால் ஓரளவு மழை பெய்யும் என்றார்.