மதுரை ஆதீனம் விவகாரத்தில் தலையிட முடியாது: இந்து அறநிலையத்துறை கைவிரிப்பு

மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்து சமய அநிலையத்துறைக்கு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் 17.5.2012 அன்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், மதுரை ஆதீனத்தை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு இந்து அறநிலையத்துறை எந்த பதிலும் தரவில்லை.
இதையடுத்து, என்னுடைய மனுவை இந்து சமய அறநிலையத்துறை பரிசீலிக்கவில்லை. எனவே, எனது கோரிக்கை மனுவை சட்டப்படி பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந் நிலையில், 17.5.2012 அன்று கொடுத்த மனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) எம்.ராஜாராம், கடந்த 22ம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
திருஞானசம்பந்த சுவாமிகள் மடம் என்ற மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 46 (3) கீழ் பட்டியலிடப்பட்ட மடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மடத்தின் ஆதீனமாக அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர்தான் மதுரை ஆதீனத்தின் தலைவராவார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதரும், நித்யானந்தாவும் சேர்ந்து ஒப்பந்த பத்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
அதில் மதுரை ஆதீனம், அறக்கட்டளை ஆகியவைகளை நிர்வகிப்பதற்கும், தனக்கு பின் ஆதீனத்தின் சன்னிதானமாக நித்யானந்தா செயல்படுவார் என்று அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார். அந்த பிரமாணப்பத்திரத்தை 27.4.2012 அன்று பதிவு செய்துள்ளனர்.
அதேநேரம், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் விதிகளின்படி, இப்போதைய நிலையில் அருணகிரிநாதர் மட்டுமே மதுரை ஆதீனத்தின் சன்னிதானமாக செயல்பட முடியும். மதுரை ஆதீனத்தின் சன்னிதான பொறுப்பில் காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே, நித்யானந்தாவால் அந்த பொறுப்பில் செயல்பட முடியும்.
இந்த நிலையில், மதுரை ஆதீனத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிதிகளின்படி, மதுரை ஆதீனத்தின் சன்னிதான பொறுப்பு காலியிடமாக இருந்தால், அந்த காலியிடத்தை நிரப்புவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அல்லது அந்த காலியிடம் உடனடியாக நிரப்பாமல் இருந்தால் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறையால், இந்த விவகாரத்தில் தலையிட முடியும்.
தற்போது மதுரை ஆதீன விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறையால் தலையிட இயலாது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications