"ஆபரேஷன் ஒசாமா " பற்றிய புத்தகம் எழுதியவர் உயிருக்கு ஆபத்து
வாஷிங்டன்: அல் கொய்தா இயக்கத் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்காவின் சிறப்பு கமாண்டோ படையினர் வேட்டையாடியது தொடர்பாக புத்தகம் எழுதிய அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அல்குவைதாவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் அந்த புத்தகத்தை எழுதிய அமெரிக்க கடற்படை அதிகாரியின் புகைப்படம் பெயருடன் பிரசுரிக்கப்பட்டு அதன் கீழ், மாவீரன் சேக் ஒசாமா பின் லேடனை படுகொலை செய்த நாய்" என்று பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டிருபதால் அவரது உயிருக்கு பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோல் மற்றொரு இணையதளத்தில், ஒசாமா கொன்றவர்களை கொல்ல வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரத்தில் அமெரிக்க ராணுவ தளபதிகளும் ரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை வெளிப்படுத்துவது என்பது குற்றவியல் நடவடிக்கைக்குட்பட்டது என்பதும் அமெரிக்க ராணுவ தளபதிகளின் கருத்து.
சர்ச்சைக்குரிய அந்த புத்தகத்தில், ஒசாமா பின்லேடனை தாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க அதிபர் ஒபாமா தயாராக இருக்கவில்லை என்றும் மூன்று முறை இத்திட்டத்தை அவர் ஒத்திப்போட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டிருந்தது. இப்புத்தகம் அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு நாளான செப்டம்பர் 11-ந் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.