கந்து வட்டி கொடுமையால் விஷம் குடித்த குடும்பம்: கணவர் பலி, மனைவி உயிர் ஊசல்
நெல்லை: புளியங்குடியில் கந்து வட்டி கொடு்மையால் குடும்பத்துடன் விஷம் குடித்த வியாபாரி பலியானார். மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் ஒரு பெண்ணை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி சி்ந்தாமணி சொக்கலிங்கசாமி கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்து குமார். அவரது மனைவி பார்வதி. அவர்களுக்கு முனீஸ்வரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். சைக்கிளில் சென்று பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்த முத்து குமார் சில மாதங்களுக்கு முன்பு மதுரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் இடத்தில் புதிதாக பழைய இரும்பு கடை வைத்தார். இதற்காக அவர் கந்து வட்டிக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லாததால் அவர் கடனை செலுத்த முடியாமல் திணறி வந்தார்.
இதற்கிடையே கடன் கொடுத்தவர்களில் சிலர் அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குவாதம் முற்றவே விரக்தியடைந்த முத்து குமார் விஷம் குடித்தார். இதை பார்த்த பார்வதி பாலில் விஷம் கலந்து தான் குடித்ததுடன், குழந்தைகளுக்கும் கொடுத்தார். உயிருககு போராடிய அவர்களை உறவினர்கள் மீட்டு சிந்தாமணியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு முத்து குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பார்வதி, குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பார்வதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
புளியங்குடி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி முத்துகுமாரின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மதியம் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பின்னர் முத்து குமாரின் வீடடில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த ஒரு டைரியை கைப்பற்றினர். அதில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர் இருந்தது. சிந்தாமணியைச் சேர்ந்த பூமாரி என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம், அம்மணி என்பவரிடம் ரூ.75,000, திருமலை என்பவரிடம் ரூ.50,000 வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் பூமாரியை அழைத்து விசாரணை நடத்தினர். அவர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தது தெரிய வந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். முத்து குமார் குடும்பத்துடன் விஷம் குடித்ததை அறி்ந்த திருமலை தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.