சஹானாஸ் உள்பட 25 பெண்களை ஆபாசப் படம் பிடித்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சிக்குவாரா?

கேரளாவைச் சேர்ந்த பெண் சஹானாஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 50க்கும் மேற்பட்ட ஆண்களை மோசடியாக திருமணம் செய்ததாக அவர் மீது, அவரது கணவர்கள் என்று கூறப்படும் சிலர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து சஹானாஸ் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு சஹானாஸ் அளித்த பேட்டியில் தன் மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்தார். தனது இந்த நிலைக்குக் காரணம், தான் முன்பு வேலை பார்த்து வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உரிமையாளர்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
அந்த கடையில் தான் வேலை பார்த்தபோது உடை மாற்றும் அறைக்குள் ரகசிய கேமராவை வைத்து தன்னை நிர்வாணமாக அவர் பிடித்தார் என்றும், இதைக் காட்டி தனது காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள முயன்றார் என்றும், அதற்கு தான் உடன்படாததால் சிலரைத் தூண்டி விட்டு தனது கணவர்கள் என்று கூறிப் புகார் கொடுக்கத் தூண்டி விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் சஹானாஸ்.
மேலும் தன்னைப் போல 25க்கும் மேற்பட்ட பெண்களை அந்த கடை உரிமையாளர் சீரழித்து வருவதாகவும் கூறியிருந்தார் சஹானாஸ். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரைப் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, சென்னைப் புறநகர் ஒன்றில்தான் சஹானாஸ் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள அவரது தோழியின் வீட்டில் அவர் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்தத் தோழி யார், அவரது வீடு எங்கு உள்ளது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் வேறு எங்காவது தப்பி விடாத வகையில் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கி விட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications