நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடி-இந்தியாவின் முகத்தில் கரியை பூசியது காங்கிரஸ்: மோடி
காந்திநகர்: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, இந்தியாவின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரத்தலான விவசாய ஆராய்ச்சி மற்றும் உயர் நுட்ப பயிற்சி மையம் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டு உடனான ஒப்பந்தம் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
அப்போது அவர், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி செய்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
குஜராத்தில் உள்ள விவசாயிகளுக்கு மண் குறித்த அறிக்கை அடங்கிய அட்டைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் அதை எப்போது வழங்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. மத்திய அரசு தற்போது நிலக்கிரி சுரங்க ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளது.
இந்த மோசடியின் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது. இதுவரை நிகழ்ந்த ஊழல்களிலேயே இதுதான் மிகப் பெரியது. இந்தியாவிலேயே தொழில்துறை, வேளாண் துறை ஆகியவற்றில் வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் குஜராத் தான்.
விவசாயத்துறையில் நாட்டின் வளர்ச்சி வீதம் 2 முதல் 3 சதவீதம் தான் உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் விவசாயத்துறையில் 10 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் உள்ள 7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள், நுண்ணிய பாசன வசதியை பெற்றுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய 40 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் மட்டுமே, நுண்ணிய பாசன வசதியை பெற்றது.
வரும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை குஜராத்தில் சர்வதேச அளவிலான விவசாய கண்காட்சி நடைபெறும். இதில் நவீன விவசாய முறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்படும். மேலும் இஸ்ரேல் அரசின் உதவியுடன் குஜராத்தில் ஒரு விவசாய கல்லூரி அமைக்கப்படும். இதில் படிக்கும் மாணவர்களுக்கு, இஸ்ரேல் பல்கலை கழகம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications