பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்: அந்தோணி தகவல்
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரப் பகுதியில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ல அந்தோணி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரத்தில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து இந்தியாவின் கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
மேலும் எல்லைப் பகுதிகளிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரத்திலும் உள்கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருவதை இந்தியா அறிந்திருக்கிறது. ஆனால் இந்திய எல்லைக்குள் கடந்த 3 ஆண்டுகளாக சீனா ஊடுருவல் எதனையும் நிகழ்த்தவில்லை என்றார்.
ஜம்மு காஷ்மீரில் 1962-ம் ஆண்டிலிருந்து 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரப் பகுதியிலிருந்து 5180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்திருக்கிறது என்றும் ஏ.கே. அந்தோணி தமது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் அருணாசலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு தங்களுக்குரியது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications