பீகாரிகள் மும்பையில் நுழைய "பெர்மிட்" வாங்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

சிவசேனாவின் "சாம்னா" பத்திரிகையில் உத்தவ்தாக்கரே கூறியுள்ளதாவது:
பீகார் முதல்வர் நிதீஷ் குமார், நம்பிக்கைத் துரோகிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவாரானால் வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதீஷ் குமாரை சிவசேனா கட்சி ஏற்காது.
அசாம் கலவரம் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையில் பீகாரி ஒருவருக்கு தொடர்பிருப்பதை நிதீஷ் குமார் அவமானமாகக் கருதவேண்டும். ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பீகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நிதீஷ் குமார் பிரச்னையைக் கிளப்பிவிட்டுள்ளார்
மும்பையில் குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு பீகாருக்கு ஓடிவிடும் ஒருவரைப் பிடிக்க பீகார் போலீஸின் அனுமதியை மும்பை போலீஸ் பெற வேண்டும் என்றால், இனிமேல் பீகாரில் இருந்து மும்பை வருபவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும், பெர்மிட் பெற வேண்டும் என்றும் அதில் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனாவில் இருந்து பிரிந்த ராஜ் தாக்கரேவின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருவதால் இதுபோன்ற பிரிவினைவாத பேச்சை வைத்தே தனது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய நிலைக்கு பால் தாக்கரேயும் அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தவ் கருத்தை பாஜக ஏற்கவில்லையாம்..
இந் நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசைன் கூறுகையில், பாஜகவின் முந்தைய அமைப்பான ஜன சங், ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையில் இருந்த அனுமதி முறையை எதிர்த்துப் போராடியது. காஷ்மீரில் நுழைவதற்கு அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர் கட்சியின் நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜி.
எனவே மகாராஷ்டிரம் செல்வதற்கு அனுமதி முறை தேவையில்லை. எனவே உத்தவ் தாக்கரேவின் கருத்தை ஏற்க முடியாது. ஒவ்வொரு பீகாரிக்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் உரிமையிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications