தமிழக அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் முறை-அமைச்சர் விஜய்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள் முதல் டாக்டர்கள் வரை உள்ள அனைத்து ஊழியர்களின் வருகை பதிவும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் டாக்டர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக்கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா நேற்று துவங்கியது. விழாவில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் விழாவை துவக்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பயோ மெட்ரிக் முறையிலான வருகை பதிவு அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், தாலுக்கா மருத்துமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கு வரும் நேரம் மற்றும் பணி முடிந்து செல்லும் நேரத்தை துல்லியமாக கணக்கிட முடியும். இந்த பயோமெட்ரிக் முறை அடுத்த ஒரு மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தூய்மையாக வைத்து கொள்ளும் வகையில், சுமார் 13 ஆயிரம் துப்பரவு பணியாளர்கள் உள்ளனர். மேலும் தற்காலிக துப்பரவு பணியாளர்களை, மருத்துவமனை அதிகாரிகள் நியமித்து கொள்ளலாம். மருத்துவக் கல்லூரிகளில் ராக்கிங் நடைபெறுவது குறித்து இந்த ஆண்டு எந்த புகாரும் வரவில்லை. இது போன்ற புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்டவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications