சென்னை மாநில கல்லூரியில் கத்திகள் பறிமுதல்- மாணவர்கள் மோதலை தவிர்த்த போலீஸ்
சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் தொடர்பாக இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட இருந்த மோதல் தடுக்கப்பட்டது. மாநிலக் கல்லூரிக்குள் இன்று போலீசார் நடத்திய சோதனையில் 3 கத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் கடந்த 31-ந் தேதி நடைபெற்றது. இதில் ஞானகார்த்திக் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை ஞானகார்த்திக் ஆதரவாளர்கள் கொண்டாடிய போது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. போலீசார் தலையிட்டு மோதலைத் தடுத்தனர். இதனால் அப்போது கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இன்று மீண்டும் கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் போலீசார் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதியுடன் நேற்று மாநிலக் கல்லூரியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 5 பட்டாக் கத்திகளை போலீசார் கைப்பற்றினர்.
இன்றும் காலையில் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் பிகாம் படித்து வந்த மாணவி செவ்வந்தி மரணமடைந்த காரணத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இது தெரியாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்களில் ஞானகார்த்திக் ஆதரவாளர்கள் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அப்போது எதிர்தரப்பு மாணவர்கள் கடற்கரையில் இருந்தபடி கல்வீசித் தாக்கினர். இதையடுத்து இருதரப்பும் கட்டைகள், கரும்புகளுடன் மோதலுக்குத் தயாராக இருந்தனர்.
அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இருதரப்பு மாணவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பெரும் மோதலை தவிர்க்கச் செய்தனர். பின்னர் மீண்டும் இன்றும் கல்லூரிக்குள் சென்று போலீசார் சோதனை நடத்தினர். இன்று 3 கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications