சிவகாசியில் சரியான மருத்துவமனைகள் இல்லை விருதுநகர் எம்.எல்.ஏ, எம்.பி புகார்
சிவகாசி : சிவகாசி, விருதுநகரில் தீக்காய சிகிச்சைப் பிரிவை குணப்படுத்த சரியான மருத்துவ வசதி இல்லை என்று விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் தே.மு.தி.க எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர்வரை உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிக்கடி சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகிவருகிறது. உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளை கையாள்வதற்கு சரியான வசதிகள் எதுவும் விருதுநகர், சிவகாசி பகுதிகளில் இல்லை என்பது வேதனையான அம்சம்.
தீயணைப்பு, சரியான மருத்துவ வசதி எதுவும் இல்லை என்பது நீண்ட நாள் புகாராகும். விருதுநகரிலும், சிவகாசியிலும் இது குறித்த மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விருதுநகர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், ஊழல் காரணமாகவும், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த தொகுதியில் தீக்காய சிகிச்சைப்பிரிவு மருத்துவமனை எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
இதனால் காயமடைந்தவர்களை மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகமாகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டாகும்.
இதேபுகாரினை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதுநாள் வரை ஆட்சியில் இருந்தவர்களும், இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களும் இதை கவனத்தில் கொண்டால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications