சென்னை அண்ணா நகர் ஆர்ச்சை இடிக்கும் பணிக்கு முதல்வர் ஜெயலலிதா தடை
சென்னை அண்ணாநகர் பகுதியில் நெரிசலை குறைக்க 2 மேம்பாலங்களும் சுரங்கப் பாதையும் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு இடையூறாக அண்ணா ஆர்ச் இருந்து வந்தது. இதையும் இடிக்க முறையாக சென்னை மாநகராட்சியிடம் அனுமதியும் பெறப்பட்டது. கடந்த 4 நாட்களாக அண்ணா ஆர்ச்சை அகற்றும் பணி நடைபெற்று வந்தது.
82 டன் எடை கொண்ட 52 அடி உயர அண்ணா ஆர்ச்சை இடித்து தள்ளினால் பக்கத்தில் உள்ள வீடுகளும் பாதிக்கப்படும் என்பதால் வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் நுழைவு வாயிலின் உறுதித் தன்மை பலமாக இருந்ததால் இம்முயற்சி தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர தலைமைப்பொறியாளர் சாமுவேல் எபனேசர், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் பணி நடந்த இடத்தை நேரடியாக நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளும், முதல்வர் அலுவலக உயர் அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நுழைவு வாயிலின் உறுதித் தன்மை பலமாக இருப்பதால் இடிக்காமல், பாலத்தின் வழியை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் வெட்டப்பட்ட அண்ணா நுழைவு வாயிலை தாங்கி நிற்கும் தூண்களின் மேல்பகுதி நவீன தொழில்நுட்பத்துடன் ஒட்டப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணா ஆர்ச்சை இடிக்கும் பணிக்கு தடை விதித்து முதல்வர் உத்தரவிட்டார். மேலும் அண்ணா ஆர்ச் வழியாக அமைக்கப்பட இருந்த மேம்பாலத்தை சற்று தள்ளி அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் பவளவிழாவைப் போற்றும் வகையில் இந்த அண்ணா ஆர்ச் அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் இதனை திறந்து வைத்தார்.