ஸ்பெக்ட்ரம் ஊழல்: குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரும் கனிமொழி மனு மீது அக்.15-ல் விசாரணை
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்த மனு மீது அக்டோபர் 15-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கனிமொழி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ,கே. பதக் முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி, ""இந்த வழக்கு தொடர்பான வாதங்களை எடுத்துரைக்க 3 நாள்கள் தேவை'' என்றார். இதையடுத்து, அவரது மனு மீதான விசாரணை அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி கூறினார்.
இதேபோல் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் சரத்குமார் உள்பட 14 பேர் தாக்கல் செய்த தனித்தனி மனுக்கள் மீதான விசாரணையும் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும் என்றும் நீதிமன்றம் கூறியது.
முன்னதாக, தமக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி ஆ. ராசா தாக்கல் செய்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருவதாக இருந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக தி.மு.க. எம்பி கனிமொழி 2011 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் நவம்பர் 28-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. அதன்படி சி.பி.ஜ. சிறப்பு நீதிமன்றத்தில் தினந்தோறும் நடைபெறும் விசாரணையில் அவர் ஆஜராகி வருகிறார்.












Click it and Unblock the Notifications