இஸ்ரோவின் சாதனைப் பயணம்... 63 செயற்கைக் கோள்கள், 37 ராக்கெட்கள்!
சென்னை: தனது 100வது விண் பயணத்தை இன்று வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ, இதுவரை மொத்தம் 63 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ராக்கெட் பயணம் என்று பார்த்தால் இன்றுடன் சேர்த்து மொத்தம் 37 ராக்கெட்களை செலுத்தியுள்ளது.
கடந்த 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி இஸ்ரோ தனது பயணத்தை ஆர்யபட்டா செயற்கைக் கோளுடன் தொடங்கியது. இந்தியாவின் முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது ரஷ்ய ராக்கெட்டாகும். அதன் பின்னர் இன்று வரை மொத்தம் 63 இந்திய செயற்கைக் கோள்களை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இன்று ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி 21 ராக்கெட்டையும் சேர்த்து இதுவரை மொத்தம் 37 ராக்கெட்களை ஏவியுள்ளது.
இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் ஏவுதல் திட்டங்களுக்காக மத்திய அரசு இதுவரை கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் நிதியை செலவிட்டுள்ளது. ஆனால் நாசாவுடன் ஒப்பிடும்போது இது மிக மிகச் சிறிய தொகையை. நாசாவின் வருடாந்திர பட்ஜெட் அளவு 17 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி ஒதுக்கீடு குறைவானதாக இருந்தாலும் கூட பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது இஸ்ரோ. அதில் முக்கியமானது சந்திராயன் -1. இந்தத் திட்டம் இந்தியாவை உலக அளவில் மிகப் பெரிய பெருமைக்கு வித்திட்டது என்பது நினைவிருக்கலாம். காரணம் சந்திராயன் பயணத்தின்போதுதான் நிலவில் தண்ணீர் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது என்பது முக்கியமானது. மேலும் நாட்டின் தொலைத் தொடர்புத்துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைய இஸ்ரோவின் விண் பயணங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
சாதனைகள் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஏராளமான சோகக் கதைகளும் இஸ்ரோவிடம் உண்டு. பல ராக்கெட்கள் தோல்வி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications