கூடங்குளத்தில் இன்று முற்றுகைப் போராட்டம்- பொறுப்பேற்க உதயகுமாருக்கு ஆட்சியர் நோட்டீஸ்
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உதயகுமாருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் கூறியுள்ளதாவது:
சென்னை உயர்நீதிமன்றம் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்குவதற்கு தடை விதிக்க முடியாது எனவும், அணு உலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்துக்குள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144 (1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
இந்தநிலையில் மீனவ கிராமங்களில் கிராம கமிட்டியை கூட்டி வரும் 9-ந் தேதியன்று அணு உலை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக தெரியவந்தது.
இந்த செயல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் குற்ற நடவடிக்கை தொடர ஏதுவாக அமையும். இதை தெரிவித்தும், ஊர்வலம், கூட்டங்கள், முற்றுகை போராட்டம் போன்றவற்றில் சிறுவர்கள், பள்ளிக்கூட குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பெண்களை ஈடுபடுத்தும் போது, அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உதயகுமார் மறுப்பு
ஆனால் இந்த நோட்டீசை வாங்க உதயகுமார் மறுத்துவிட்டதால் அவருக்கு இ மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் குவிப்பு
இன்றைய முற்றுகைப் போராட்டத்தையொட்டி கூடங்குளம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்றைய போராட்டத்தில் எவரது உயிருக்கும் அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் அவர்தம் குடும்பத்தாருக்கு ரூ5 லட்சம் வழங்கப்படும் என்று போராட்டக் குழுவினர் நேற்று தண்டோரா போட்டு அறிவித்ததால் பரபரப்பும் பதற்றமுமாக இருக்கிறது கூடங்குளம் சுற்றுவட்டாரம்.












Click it and Unblock the Notifications