சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயாத மர்மம் என்ன?
சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து நடந்து 4 நாட்கள் ஓடியும் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் சோகத்தில் இருந்து மீளவில்லை. பட்டாசு ஆலையில் 7 அறைகள் மட்டுமே இருந்தால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் லைசென்சு பெற வேண்டும். ஆலையில் 13 அறைகள் இருந்ததால் சென்னை வெடிபொருள் கட்டுபாட்டு அலுவலரிடமும் 13 அறைக்கு மேல் இருந்தால் நாக்பூர் வெடிபொருள் கட்டுபாட்டு துறை அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் 38 பேரை பலிகொண்ட படடாசு விபத்து நடந்து 4 நாட்கள் ஆகியும் ஆலையை ஓப்பந்தம் எடுத்தவர், போர்மேன், கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்பட 12 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த ஆலை உரிமையாளர் தலைமறைவாகவே இருக்கிறார்.
ஆனால் விதிமீறல்களை கண்காணிக்க வேண்டிய பட்டாசு ஆலைக்கான தனி தாசில்தார், வருவாய்துறை, தீயணைப்பு துறை, தொழிலாளர்துறை, வெடிபொருள் கட்டுபாட்டுதுறை, சுகாதார துறை என 6 துறை அதிகாரிகள் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
விபத்து நடந்த ஆலையில் வெடிபொருள் துணை தலைமை கட்டுபாட்டு அலுவலர் ரங்கசாமி ஆகஸ்ட் 28ந் தேதி சோதனை நடத்தி விதிமீறல்கள் இருந்ததால் உற்பத்தியை நிறுத்த நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விபரம் கூட விபத்து நடநத பினனரே தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்து இருக்காவிட்டால் ஆலை இன்றுவரை இயங்கி வந்து இருக்கும். இந்த விபத்தில் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, வெடிபொருள் கட்டுபாட்டு துறை, காவல் துறை வரையிலான அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க கொண்டு செல்வதற்கான சாலை வசதி செயல்படாத காரணத்தினால் நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளும் விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications