செவ்வாய்க்கு அடுத்த ஆண்டு நவம்பரில் விண்கலம் அனுப்ப முடிவு: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்

ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி.- சி21 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
செவ்வாய்க் கிரகம் பூமிக்கு அருகே 2013, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் வருகிறது. அடுத்த ஆண்டில் செவ்வாய்க்கு விண்கலத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் மூன்றாவது வாரத்திலிருந்து நவம்பர் மாதத்துக்குள் இது செலுத்தப்படும். இதற்கான பணியில் 2010 முதலே ஈடுபட்டு வருகிறோம்.
300 நாள் பயணம்
செவ்வாயின் நீள்வட்டப் பாதையில் இந்த விண்கலத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். குறைந்தபட்சம் 500 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 80 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இந்தப் பாதை இருக்கும். இதற்காக புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது.செவ்வாய்க் கிரகத்தில் மீத்தேன் வாயுவைக் கண்டறியவும், அந்தக் கிரகத்தை அடைவதில் உள்ள சவால்களை அறியவுமே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.செவ்வாய்க் கிரகத்துக்கு செல்ல விண்கலம் 300 நாள்கள் பயணிக்க வேண்டியிருக்கும்.
பூமியிலிருந்து சுமார் 55 மில்லியன் கிலோ மீட்டர் முதல் 400 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க நேரலாம் என்பதால் அங்கிருந்து தொடர்புகொள்வதற்கான தொலைத்தொடர்பு சாதனங்களையும் உருவாக்க வேண்டும்.
சந்திரயான் விண்கலத்திலிருந்து பெற்ற அனுபவத்தைக் கொண்டு எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் வகையில் இந்த விண்கலம் உருவாக்கப்படும். செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தின் முதன்மையான நோக்கம் செவ்வாய்க் கிரகத்தின் பாதையை அடைவதாக இருக்கும். இது சீனாவுக்குப் போட்டியானது அல்ல என்றார் அவர்.












Click it and Unblock the Notifications