இடிந்தகரையிலிந்து கூடங்குளம் கிளம்பியவர்கள் மீது போலீஸார் தடியடி, பெரும் கலவரம்

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதியில், கடற்கரையில் பல ஆயிரம் கிராம மக்கள் திரண்டு வந்து முகாமிட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைக் கலைக்க தடியடி உள்ளிட்டவற்றை நடத்தினால் பெரும் விபரீதம் ஏற்படும் என்பதால் போலீஸார் என்ன செய்வது என்று தெரியாமல் பெருத்த பொறுமை காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் 500 பேருக்கும் மேல் இடிந்தகரை கிராமத்திலிருந்து அணி அணியாக கூடங்குளத்திற்குக் கிளம்பினர். இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதையடுத்து ஏற்கனவே அங்கு வந்து குவிந்து விட்ட போலீஸார், இடிந்தகரை மக்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இந்த நிலையில் போலீஸாரை மீறி பொதுமக்கள் கிளம்ப எத்தனித்தனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தால் தற்போது கூடங்குளத்தைப் போலவே இடிந்தகரையிலும் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications