சீர்காழி அருகே திமுக பிரமுகர் குண்டு வீசி கொலை: பதற்றம்
சீர்காழி: சீர்காழி அருகே திமுக பிரமுகர் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜேந்திரன் (60) திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
நேற்றிரவு தனது வணிக வளாகம் முன் நண்பர்களுடன் முத்துராஜேந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென முத்துராஜேந்திரனை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசினர்.
குண்டு வெடித்து புகை மண்டலம் கிளம்பியதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அப்போது பைக்குகளில் வந்த அந்தக் கும்பல் முத்துராஜேந்திரன் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தள்ளியது.
இதில் தலையில் பலத்த வெட்டுபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்தக் கும்பல் தப்பி சென்று விட்டது.
திமுக பிரமுகர் கொலையுண்ட தகவல் அறிந்ததும், அந்தக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முத்துராஜேந்திரனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், குணா, சுரேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து இன்றும் மேலையூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளறன. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாவண்ணம் தடுக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து மேலையூருக்கு இன்று பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications