கூடங்குளம் தாக்குதலுக்கு கண்டனம்: சென்னையில் மறியல்-திருமா, கொளத்தூர் மணி கைது
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் நடத்திய கொடுந்தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அரசியல் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் உள்ளிட்ட பல நூறு பேர் கைதாகினர்.
சென்னை அண்ணா சாலையில் மறியலில் கொளத்தூர் மணி, வேல்முருகன், மதிமுகவின் மல்லை சத்யா உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அண்ணா சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட கொளத்தூர் மணி, வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து திருமாவளவன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல் சென்னை கடற்கரை சாலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மீனவர்கள் கொடுக்க திரண்டிருந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களும் கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இன்று தமிழகம் முழுவதும் மதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் சார்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications