பாரிமுனையில் பெண் சாப்ட்வேர் என்ஜினியரை கழுத்தை அறுத்து கொன்ற காதலனும் தற்கொலை!

சென்னை திருவொற்றியூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்த செந்தமிழ் செல்வனின் மகள் கார்த்திகா (23) துரைப்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களாக நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் புராஜெக்ட் வேலைக்காக சென்று வந்தார். இதற்காக காலையில் திருவொற்றியூரில் இருந்து பஸ்சில் பாரிமுனை சென்று அங்கிருந்து வேறு பஸ்சில் நந்தம்பாக்கம் செல்வார்.
வழக்கம்போல் இன்று காலை 8.30 மணிக்கு பாரிமுனை பஸ் நிலையத்துக்கு வந்தார் கார்த்திகா.
அப்போது ஒரு வாலிபர் கார்த்திகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திகாவை குத்தினார்.
கத்திக் குத்துப்பட்ட கார்த்திகா அலறியபடியே அந்த வாலிபரிடமிருந்து தப்பி ஓடினார்.
ஆனால் அந்த வாலிபர் கார்த்திகாவை விரட்டிச் சென்று தொடர்ந்து சரமாரியாகக் குத்தினார். தரையில் விழுந்து துடித்த கார்த்திகாவை கழுத்து, மார்பு, வயிற்று பகுதியில் பல இடங்களில் குத்திய அந்த நபர், அதன் பிறகும் பயங்கரமாக கத்தியபடி கழுத்தையும் அறுத்தார். இதில் கார்த்திகாவின் கழுத்து அறுந்து தொங்கியது.
நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நடந்த இந்தக் கொடூர கொலையால் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். கொலைகாரன் யாரும் அருகில் நெருங்கவில்லை.
இந் நிலையில் கார்த்திகா இறந்ததை உறுதி செய்த அந்த நபர், திடீரென கத்தியால் தனது இடது பக்க வயிற்றில் குத்திக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
போலீசார் விரைந்து வந்து கார்த்திகாவின் உடலையும், அந்த வாலிபரையும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
போலீசாரின் விசாரணையில் காதல் பின்னணியில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.
கொலை செய்த நபரின் பெயர் ராஜரத்தினம். இவரது தந்தை ஜெயசிங். கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் அருகே உள்ள ஆலங்கோட்டையைச் சேர்ந்தவர். கார்த்திகாவின் குடும்பத்துக்கும் இது தான் சொந்த ஊராகும்.
கார்த்திகாவின் குடும்பத்தினர் வாடகைக்கு இருந்த வீட்டின் மேல் உள்ள அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த ராஜரத்தினம், வண்ணாரப்பேட்டையில் ஒரு கார் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திகாவும், ராஜரத்தினமும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதை இரு வீட்டினரும் ஏற்றுக் கொண்டனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஓராண்டுக்கு முன்பே பேசி முடிவு செய்தனர்.
ஆனால், ராஜரத்தினத்தினத்துக்கு போதை, குடிப் பழக்கம், பெண்களுடன் தொடர்புகள் இருப்பது பின்னர் கார்த்திகாவின் குடும்பத்துக்குத் தெரியவந்தது. அவரது அறையில் கஞ்சா பொட்டலங்களும், காண்டங்களும் இருந்ததை கார்த்திகாவின் குடும்பத்தினர் ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தபோது அதிர்ந்தனர்.
மேலும் அவரைக் கண்காணித்தபோது பல பெண்களுடன் சுற்றுவதும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகாவின் பெற்றோர் ராஜரத்தினத்திடமே நேரில் பேசியுள்ளனர். கார்த்திகாவை உனக்குத் திருமணம் செய்து தர மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
தனது கெட்ட பழக்க, வழக்கங்களை ஒப்புக் கொண்ட ராஜரத்தினம் தானும் கார்த்திகாவை விட்டு விலகுவதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து வேறொரு வீட்டிற்கு குடி பெயர்ந்தது கார்த்திகாவின் குடும்பம்.
ஆனாலும் கார்த்திகாவை விடாமல் துரத்தியுள்ளார் ராஜரத்தினம். இது குறித்து கார்த்திகா வீட்டில் தெரிவிக்கவே, அவரது தாய் மாமா உள்ளிட்டோர் ராஜரத்தினத்தை பலமுறை கண்டித்துள்ளனர்.
நேற்று முன்தினம் கார்த்திகாவை சர்ச்சில் வைத்து ராஜரத்தினம் தொல்லை செய்யவே, மீண்டும் எச்சரித்துள்ளார் அவரது மாமா.
இந் நிலையில் கத்தியுடன் கார்த்திகாவை பின் தொடர்ந்து வந்து பஸ் நிலையத்தில் வைத்து கொலை செய்துள்ளான் ராஜரத்தினம்.
பஸ் நிலையத்தில் கார்த்திகாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா முடியாதா என்று கேட்டுள்ளார் ராஜரத்தினர். அதற்கு கார்த்திகா முடியாது என்று பதில் சொல்விட்டு நகரவே, கத்தியால் வெறித்தனமாக குத்திக் கொலை செய்துள்ளான்.
பலத்த கத்திக் குத்து காயத்துடன் அவனுக்கு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.












Click it and Unblock the Notifications