பெண் டாக்டர் போதை ஊசி போட்டு டார்ச்சர்: வாலிபர் தற்கொலை- பரபரப்பு கடிதம் சிக்கியது
திருப்போரூர்: திருப்போரூரில் பெண் டாக்டரின் டார்ச்சர் தாங்க முடியாமல் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (31). அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரில் இன்டர்நெட் சென்டர் வைத்திருந்தார். அவரது மனைவி புவனா. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரமேஷ் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுமிதாவிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். முதலைக் கட்ட முடியாமல் வட்டியை மட்டும் கட்டி வந்தார்.
இந்நிலையில் சுமிதா பணம் முழுவதையும் திருப்பிக்கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுமிதா 10க்கும் மேற்பட்ட ரவுடிகளை ரமேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் ரமேஷின் வீட்டுக்குள் புகுந்து பணத்தைக் கேட்டு மிரட்டினர். இந்நிலையில் நேற்று புவுனா மட்டும் வீட்டில் இருந்தபோது ரவுடிகள் மீண்டும் வந்து மிரட்டினர். இதனால் பயந்துபோன புவனா தண்டலத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டு்க்கு சென்றுவிட்டார்.
இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த அவர் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு ரமேஷ் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககாக அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனை செய்தபோது ரமேஷ் எழுதிய கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
நான் தற்கொலை செய்து கொள்ள முடிவுபண்ணிவிட்டேன். என்னால் இனிமேல் வாழ முடியாது. நான் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தேன். அவர் பெயர் டாக்டர் சுமிதா. சென்னையில் ஒரு கிளினிக் வைத்துள்ளார். அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் திருப்போரூரில் சில ஆட்களை வைத்து மிரட்டுகிறார். என்னால் அந்த டார்ச்சரை தாங்க முடியவில்லை.
எனக்கு அவர்கள் தூக்கம் மற்றும் போதைக்கான ஊசிகள் போட்டுள்ளனர். அவர்களுடன் என்னால் நேருக்கு நேர் போராட முடியவில்லை. அதனால் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்.
புவனா என்னால் நீ காலையில் அழுததை பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை, என்னை மன்னித்துவிடு,... குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள். முகிலனையும், வர்ஷினியையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். குழந்தைகளை அடிக்காதே, இவர்களை எல்லோரையும் விட ஏன் உன்னையும் விட எனக்கு உன் அண்ணனை நிறைய பிடிக்கும்.
டாக்டர் சுமிதா என்னிடம் எல்லாவற்றையும் மிரட்டிதான் சாதித்துள்ளார் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.
இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.