தாயின் கள்ளக்காதலனை கடத்திச் சென்று அடித்துக் கொன்ற மகன்
திருச்சி: தாயுடன் தவறான தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலனை மகனும், அவரது நண்பர்களும் சேர்ந்து கடத்திச் சென்று கொலை செய்து உடலை வனப் பகுதியில் வீசிவிட்டுத் தப்பிவிட்டனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியை சேர்ந்த கொத்தனார் ரஞ்சித் (25).
இதே ஊரைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி கோகிலா (45). இவர்களுக்கு தர்மராஜ் (25), சுரேஷ் (23) ஆகிய மகன்கள் உள்ளனர்.
ரஞ்சித்துக்கும், கோகிலாவுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் கோகிலாவின் மகன்கள் தர்மராஜ், சுரேஷ்க்கு தெரியவந்தது. அவர்கள் ரஞ்சித்தை கண்டித்தனர். ஆனாலும் அவர் கோகிலாவுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை விடவில்லை.
இந் நிலையில் நேற்று காலை ரஞ்சித் மோட்டார் சைக்கிளில் துறையூர் பெரியகடை வீதியில் வந்தபோது, தர்மராஜ், அவரது நண்பர் முருகானந்தம், கலைவாணன் ஆகியோர் ரஞ்சித்தை வழிமறித்துத் தாக்கி காரில் கடத்திச் சென்றனர். இதைத் தடுக்க முயன்ற ரஞ்சித்தின் நண்பர் செந்திலை தாக்கிவிட்டுச் சென்றனர்.
இரவு முழுவதும் ரஞ்சித் வீடு திரும்பாததால் அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.
இந் நிலையில் இன்று காலை திலக்ராஜா வீட்டுக்கு வந்த ரஞ்சித் நடந்த சம்பவத்தை விளக்கினார். இந்தத் தகவல் போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் தர்மராஜ் தலைமறைவாகிவிட்டார்.
செந்தில் சொன்ன காரின் எண்ணை வைத்து அதன் டிரைவரான முபாரக் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது தர்மராஜ் அவரது நண்பர்கள் கலைவாணன், முருகானந்தம் ஆகியோருடன் சேர்ந்து ரஞ்சித்தை காரில் கடத்திச் சென்று கொலை செய்து காளிப்பட்டி வனப் பகுதியில் போட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் காளிப்பட்டி வன ப்பகுதியில் ரஞ்சித்தின் பிணத்தை மீட்டனர்.
தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.