பொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழீழம் அமைய ஆதரவு திரட்டுவோம்: மதிமுக மாநாட்டில் தீர்மானம்
கரூர்: பொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதை ஒரே இலக்காகக் கொண்டு உலகம் முழுவதும் ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபடுவோம் என்று மதிமுகவின் கரூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற மதிமுகவின் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமான அதிபர் ராஜபக்சேவை அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் இதற்கான ஆதரவை திரட்டுகின்ற பணியில் மதிமுக ஈடுபடும்.
- இலங்கை அதிபர் ராஜபக்சேவை சாஞ்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது. மீறி வந்தால் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி வைகோ தலைமையில் ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக சாஞ்சிக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
- தமிழக மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி, மீனவர் வாழ்வுரிமை மாநாடு வரும் நவம்பர் 24-ந் தேதி தூத்துக்குடியில் நடத்தப்படும்.
- கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்பக் கூடாது. அணு உலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும். அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்துக்கு மதிமுக முழுமையான அதரவு அளிக்கும்.
- முல்லைப் பெரியாறு பென்னி குயிக் கட்டிய அணையை உடைக்க முற்படாதீர்கள், தமிழகத்துக்கு வரும் தண்ணீரை அணை கட்டித் தடுக்காதீர்கள் என எச்சரிக்கை செய்வதற்காக கேரளம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை தடுத்தி நிறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி, கேரள மக்களுக்கு நிலைமையை உணர்த்த மதிமுக தொடர்ந்து முற்படும். இதற்காக 2013-ம் ஆண்டு தொடக்கத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications