கூடங்குளத்தில் உள்ள போலீசை வாபஸ் பெற வேண்டும்: அரசுக்கு நல்லக்கண்ணு வலியுறுத்தல்
நெல்லை: கூடங்குளத்தில் நிறுத்தப்பட்டுள்ள போலீஸ் படையைத் திரும்பப் பெற்று, போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அரசை வலியுறுத்தியுள்ளார்.
இடிந்தகரை தேவாலயத்தில் போலீசார் புகுந்து மாதா சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து நெல்லையில் பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உலக அளவில் மிகப்பெரிய போராட்டமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் 400 நாட்களை கடந்து அமைதி வழியில் நடந்து வருகிறது. போராட்டம் நடத்தும் மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு அவர்களது போராட்டத்தை நசுக்கும் வகையில் அடித்து தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச்சூடும் நடத்தி உள்ளனர். இந்த அடக்குமுறை தவறானது. இது விபரீதத்தை
ஏற்படுத்தும். கூடங்குளத்தில் போலீசாரால் நடத்தப்பட்ட நிகழ்வுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் அவர்கள் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் சிலை உடைத்தல் போன்ற செயல்களில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த செயலை கண்டிப்பதுடன் அங்கு அமைதி நிலவ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கூடங்குளத்தில் நடந்த தாக்குதல் மனித உரிமையை மீறிய செயலாகும். அங்கு நிறுத்தப்பட்டுள்ள போலீசார் அனைவரையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மேலும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications