தொடரும் எதியூரப்பா கலகம்: பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்க சுற்றுப்பயணம்!

தமது முயற்சியால் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது தம்மையே தூக்கி எறிந்துவிட்டது என்பது எதியூரப்பாவின் குமுறல். தம்மை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சதானந்த கவுடாவை முதல்வராக்கியது பாஜக மேலிடம். பிறகு ஓராண்டு கலகத்துக்குப் பிறகு எதியூரப்பாவின் நெருக்கடியில் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வரானார். ஆனால் இப்போது பாஜகவினர் எவருமே எந்த நிகழ்ச்சிக்குமே தம்மை அழைப்பதில்லை என்று குமுறிக் கொண்டிருக்கிறாராம் எதியூரப்பா.
இந்த சூழலில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எதியூரப்பா பேசியதாவது:
அடுத்த மாதம் மொத்தம் 100 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இந்த மாநிலத்தின் முதல்வராக நான் மீண்டும் வருவேன். எனக்கு மக்களின் ஆசிதான் தேவையே தவிர பாஜக தலைவர்களின் தயவு அல்ல. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசுகள் கர்நாடகத்துக்க்கு தேவையில்லை. இந்த மக்களுக்கு ஏழைகளுக்கான- விவசாயிகளுக்கான அரசாங்கம்தான் தேவை என்று கூறியுள்ளார்.
அதாவது வரும் அக்டோபர் மாதத்துக்குள் தம்மை பாஜகவின் மாநிலத் தலைவராக்க அக்கட்சி மேலிடம் மறுத்துவிட்டால் நிச்சயம் தனிக் கட்சி தொடங்குவது என்ற முடிவில் எதியூரப்பா உறுதியாக இருப்பதைத்தான் இந்த பேச்சு வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
எதியூரப்பாவின் முதல்வர் கனவு நிறைவேறும் வரை கலக அலைகள் ஓய்வதில்லை!












Click it and Unblock the Notifications