ஹசாரே குழு இரண்டாக உடைந்தது.. என் பெயரை கெஜ்ரிவால் பயன்படுத்த கூடாது- அன்னா!
டெல்லி: தனி அரசியல் கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் அரசியலுக்காக தமது பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அன்னா ஹசாரே குழு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஆரம்பித்தார். தொடக்கத்தில் இந்த அமைப்புக்கு ஆதரவு இருந்தாலும் அண்மையில் டெல்லியில் நடத்தப்பட்ட உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் போனது. இதன் மூலம் இந்த இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் எந்த ஆதரவும் இல்லை என்பதும் அம்பலமானது.
மேலும் தாமே அரசியல் கட்சித் தொடங்கப் போவதாக அறிவித்திருந்த ஹசாரே அப்படியே ஜகா வாங்கிவிட்டார். ஆனால் அவரது ஆதரவாளரான அர்விந்த் கெஜ்ரிவாலோ அரசியல் கட்சியைத் தொடங்கித்தான் ஆவேன் என்று பிடிவாதம் காட்டி வருகிறார்.
இது தொடர்பாக தமது சகாக்களுடன் அன்னா ஹசாரே நீண்ட ஆலோசனையை நடத்திப் பார்த்தார். ஆனால் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஒரு விஷயத்தை மட்டும் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார். அர்விந்த் கெஜ்ரிவால் தனி அரசியல் கட்சி நடத்தட்டும்.. ஆனால் அந்த அரசியல் கட்சிக்காக தமது பெயரையோ புகைப்படத்தையோ கண்டிப்பாக கெஜ்ரிவால் பயன்படுத்தக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கெஜ்ரிவால் ட்விட்டர் சமூக வலைதளத்தில், தாம் அரசியலுக்கு வந்தாக வேண்டிய நிலை இருக்கிறது. நாடு இப்போது இருக்கும் சூழலில் நாட்டைக் காப்பாற்ற தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் ஹசாரேவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான கிரண் பேடியோ, "அரசியல் கட்சியை அன்னா ஹசாரே தொடங்க மாட்டார். தற்போதைக்கு ஊழலுக்கு எதிரான இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கிறார் என்று ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந் நிலையில், கெஜரிவாலை ஒதுக்கிவிட்டு ராம்தேவுடன் கைகோர்க்க அன்னா ஹசாரே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்ற அன்னாவின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக கெஜரிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications