தர்மபுரியில் 16 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: மணமகன் உட்பட 5 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரியில் 16 வயது சிறுமிக்கு 30 வயது நபருடன் நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மணமகன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்காவில் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக, கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வருவாய் ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் ஜமுனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.
அங்கு நடத்திய விசாரணையில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருமணம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. திருமண வயதை எட்டாத சிறுமியை திருமணம் செய்ய முன்வந்த மணமகன் இளங்கோவனை(30) போலீசார் கைது செய்தனர். மேலும் திருமண ஏற்பாடுகளை செய்த மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு மறைமுகமாக திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இது போன்ற இளம்வயது திருமணங்களுக்கு ஏற்பாடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஷ்ரா கார்க் எச்சரித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications