காவிரி ஆணைய கூட்டம் ஏமாற்றம் அளிக்கிறது: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்- ஜெயலலிதா

காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் 7வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஜெயலலிதா அளித்த பேட்டி:
கேள்வி: கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு என்ன?
ஜெயலலிதா: இன்று நடைபெற்ற காவிரி ஆணைய கூட்டத்திற்கு பின்னர் பெருத்த ஏமாற்றத்துடன் தான் தமிழ்நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம். 15 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ்நாட்டில் சம்பா பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிரை காப்பாற்ற குறைந்தபட்சமாக கர்நாடகத்திலிருந்து 24 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கோரினோம். இதற்கு கர்நாடகம் ஒப்புக்கொள்ளவில்லை.
அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரம் அல்லது 3வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதுவரை இந்த 15 லட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக மிக குறைந்தபட்சமாக ஒரு நாளுக்கு 1 டி.எம்.சி. அடி தண்ணீர் வீதம் 30 நாட்களுக்கு திறந்துவிட வேண்டுமென்று கோரினோம்.
ஆனால் இதற்கும் கர்நாடகம் ஒப்புக் கொள்ளவில்லை. ஒத்த கருத்து ஏற்படவில்லையென்பதனால் இந்த ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ஒரு தீர்ப்பு கூறினார்.
நாளொன்றுக்கு 9,000 கன அடி வீதம் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று பிரதமர் கூறினார்.
ஆனால் இதற்கும் கர்நாடகம் ஒப்புக் கொள்ளவில்லை. கர்நாடகம் திரும்பத் திரும்ப தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சொட்டு காவிரி நீரை கூட எங்களால் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாது.
அதே போல பிரதமர் அறிவித்த செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரையில் ஒரு நாளைக்கு 9,000 கன அடி தண்ணீர் என்பது எதற்குமே போதாது என்பதால் நானும் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆகவே, பிரதமர் சொன்ன இந்த தீர்ப்பை நானும் மறுத்துவிட்டேன். எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
கேள்வி: கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் காங்கிரஸ் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாமல், அதேசமயம் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்தினால் தமிழ்நாட்டிற்கு இதுபோன்ற துரோகம் செய்கிறதா?
ஜெயலலிதா: இன்று நடைபெற்றதை நான் தெளிவாக சொல்லியிருக்கிறேன். இதற்குமேல் நான் தற்போது எதுவும் கூற விரும்பவில்லை.
கேள்வி: மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலக முடிவு எடுத்தபின், தேசிய அளவில் நிலவும் குழப்பம் பற்றி...?
ஜெயலலிதா: தற்போது எனது முழு கவனமும் நதி நீர் ஆணைய கூட்டத்தில்தான் உள்ளது. அரசியல் பிரச்சனை குறித்து தற்போது கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
தமிழகத்துடன் இணைந்து செயல்படுவோம்-ரங்கசாமி:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக புதுச்சேரி அரசு இணைந்து செயல்படும்.
புதுச்சேரி மாநிலத்துக்குக் கர்நாடக அரசு அளிக்க வேண்டிய 6 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினோம். இதற்குக் கர்நாடகம் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டால் புதுச்சேரி அரசும் முறையிடும் என்றார் ரங்கசாமி.
கூட்டம் முடிவடைந்த பின் கர்நாடக பவனில் செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டார் கூறுகையில், கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் தற்போது தண்ணீர் திறந்து விட இயலாது. ஆகையால், தற்போது எந்தவித முடிவும் எடுக்கக் கூடாது என்று பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தோம்.
ஆனால், அதை ஏற்காமல் பிரதமர் அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 9000 கன அடி தண்ணீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும் என்று கூறினார். இந்த உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடகத்தின் எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications