மக்களுக்கு கெடுதல் செய்வதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே போட்டி: ராமதாஸ்

வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர்களின் மானியத்திற்கு கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் பாமக சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமக ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களுக்கு கெடுதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் இடையே போட்டி நிலவுவதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதில் மத்திய, மாநில அரசுகளுக்கு போட்டி இருக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள மத்திய, மாநில அரசுகளிடையே மக்களுக்கு கெடுதல் செய்வதில் தான் போட்டி நிலவுகிறது. ஆட்சிக்கு வந்த மாநில அரசு மக்களின் மீது ரூ.20 ஆயிரம் கோடி வரியை விதித்தது. மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி வரியை விதித்தது.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது ஒரு லிட்டர் டீசல் ரூ.32 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.50க்கு விற்கப்படுகிறது. அதேபோல பெட்ரோல் விலையில் 48 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டீசல் விலை உயர்வு மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு ஆகியவற்றால் மக்கள் மேலும் பாதிப்பு அடைகின்றனர்.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த கட்சி பாமக தான். இதை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்தியாவில் சில்லரை வணிகத்தை நம்பி சுமார் 4 கோடி பேர் உள்ளனர். ஆனால் வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டால், 22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.
அன்னிய முதலீட்டின் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும், நுகர்வோர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற உறுதிமொழிகள் போலியானவை. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதிக்கப்பட்டால், பன்னாட்டு நிறுவனங்களும், அமெரிக்காவும் தான் பயனடையும்.
எனவே சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக ஆதரவு அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications