கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது 1,65,000 வழக்குகள்-வாபஸ் பெற மீனவர்கள் கோரிக்கை
தூத்துக்குடி: கூடங்குளம் பிரச்சனை காரணமாக இதுவரை போடப்பட்டுள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் சென்னையில் இருந்து குமரி வரை போராட்டங்கள் நடத்த, தூத்துக்குடியில் நடைபெற்ற மீனவர் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக அனைத்து மாவட்ட மீனவர் கருத்து கேட்பு கூட்டம் தூத்துக்குடி அந்தோனியர் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழர் களம் நிறுவன தலைவர் அரிமா வளவன் தலைமை வகித்தார். போராட்ட குழுவை சேர்ந்த பாத்திமாபாபு, சுபாஷ் பர்னாந்து, அமலதாஸ், பார்த்திபன், சைமன், சேவியர்வாஸ் உள்பட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரிமா வளவன் பேசியதாவது, கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக தமிழகம் தழுவிய அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் எங்கள் முடிவை கூடங்குளம் போராட்ட குழு தலைவர் உதயகுமாரிடம் தெரிவிப்போம். பின்னர் வெளிப்படையாக அறிவிப்போம் என்றார்.
மேலும் கூட்டத்தில், இடிந்தகரையில் பலியான மீனவர் சகாயராஜூ குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமாக கடலோர காவல்படை அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடந்த 12ம் தேதி இடிந்தகரையில் போலீசார் காலவதியான கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும்.
அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடிந்தகரையை சுற்றிலும் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள 1 லட்சத்து 65 ஆயிரம் வழக்குகளையும் 22ம் தேதிக்குள் வாபஸ் பெறவிட்டால், சென்னை பழவேற்காட்டில் இருந்து குமரி வரை அனைத்து கடலோர பகுதி மக்கள் மற்றும் தரை வழியாக பல்வேறு முற்றுகை போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications