சாஞ்சிக்கு வந்தார் ராஜபக்சே- போபாலுக்குள் புகுந்தனர் மதிமுக தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

Rajapaksa
போபால்: கடும் எதிர்ப்பு மற்றும் பதட்டத்துக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்குப் போய்ச் சேர்ந்துள்ளார் ராஜபக்சே. இதற்கிடையே, ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநில அரசு மற்றும் போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பெரும் திரளான மதிமுகவினர் போபால் நகருக்குள் புகுந்து விட்டனர். இருப்பினும் அவர்கள் மேற்கொண்டு சாஞ்சிக்குப் போய் விடாதபடி அவர்களை போலீஸார் தடுத்து வைத்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு எதிர்ப்பை ராஜபக்சே சந்தித்ததில்லை. மத்திய அரசும் கூட இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு ராஜபக்சேவின் இந்திய விஜயத்தை கடும் சிக்கலாக்கி விட்டனர் வைகோவின் மதிமுகவினர்.

ராஜபக்சே எங்கு வந்தாலும் எதிர்ப்போம் என்பதை பெயரளவில் சொல்லாமல் அவர் வருகை தரும் மத்தியப் பிரதேசத்துக்கே தனது தொண்டர் படையுடன் போய் முகாமிட்டு அலறடித்து வருகிறார்.

மத்தியப் பிரதேச எல்லைப் பகுதியில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் இளைஞர்களும், மக்களும் ஆதரவு தெரிவித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் சாஞ்சிக்கு வந்து சேர்ந்துள்ளார் ராஜபக்சே. ஆனால் போலீஸாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி ரயில் மற்றும் விமானம் மூலம் போபாலுக்குள் நுழைந்துள்ளனர் மதி்முக தொண்டர்கள். இதனால் ம.பி போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மேற்கொண்டு சாஞ்சிக்குப் போய் விடாமல் தடுக்கும் வகையில் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தடுத்து நிறுத்தப்பட்டுள்ள மதிமுகவினர் கருப்புக் கொடிகளுடன், ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு ஈழப் படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து போபால் வடக்கு எஸ்.பி. அரவிந்த் சக்ஸேனா கூறுகையில், மதிமுகவைச் சேர்நத் சில தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நாங்கள் இதுவரை கைது செய்யவில்லை. அவர்கள் சாஞ்சிக்குப் போய் விடாதபடி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

போபாலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சாஞ்சி உள்ளது. அங்கு சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு ராஜபக்சே அடிக்கல் நாட்டுகிறார்.

ஏற்கனவே சாஞ்சி அருகே உள்ள விதிஷா மற்றும் சலமத்பூர் ஆகிய இடங்களுக்கும் 10க்கும் மேற்பட்ட மதிமுகவினர் புகுந்திருந்தனர். இருப்பினும் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கொண்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று விதிஷா ரயில் நிலையத்தில் 7 பேரும், சலமத்பூரில் 6 பேரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தற்போது சாஞ்சியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் ரயில் நிலையங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக போபால் முதல் விதிஷா வரையிலான ரயில் நிலையங்களில் எந்த ரயிலையும் நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக போபாலுக்கு வந்த ராஜபக்சேவை மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் ஆகியோர் வரவேற்று ஹெலிகாப்டர் மூலம் சாஞ்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் நடைபெறும் புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் ராஜபக்சே.

சாஞ்சியானது, விதிஷா லோக்சபா தொகுதிக்குட்பட்டதாகும். இதன் எம்.பி.தான் சுஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு சாஞ்சியில் உள்ள இலங்கை மகாபோதி சொசைட்டிக்கு செல்கிறார் ராஜபக்சே. அதன் பின்னர் போபால் திரும்பி அங்கிருந்து டெல்லி போகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+