மறுபடியும் ராஜபக்சே இந்தியா வந்தால் பிரதமர் வீடு முற்றுகை: வைகோ எச்சரிக்கை

புத்தமத பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக சாஞ்சி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், ஆயிரக்கணக்காக தொண்டர்களும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து 36 மணிநேரம் பயணித்து மத்திய பிரதேச எல்லையை அடைந்த வைகோவும் தொண்டர்களும் 40 மணிநேரம் நடுரோட்டில் அமர்ந்து போராடி ராஜபக்சேவிற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
இன்று காலையில் ராஜபக்சேவின் உருவ பொம்மையும், போஸ்டர்களையும் எரித்துவிட்டு சாஞ்சி நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றபோது வைகோவையும், ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் மத்தியபிரதேச மாநில போலீசார் கைது செய்தனர். 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைதுக்குபின் செல்போன் மூலமாக 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்திற்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் தான் காரணம். இந்தியாவிற்கு இதுதான் எங்களின் கடைசி எச்சரிக்கை. இனியொருமுறை ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் பிரதமரின் வீட்டைத்தான் நாங்கள் முற்றுகையிட வேண்டியிருக்கும்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய வீடியோவை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்திருக்கிறோம். இனி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களுக்குச் சென்று மக்களுக்கு வழங்க இருக்கிறோம் என்றார் வைகோ.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் மல்லை சத்யா மற்றும் இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட ஆயிரக்கணக்கோனோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications