பணம் மரத்தில் காய்க்கவில்லை.. வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகள் அவசியம்: மன்மோகன் சிங்

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய 15 நிமிட உரையில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:
பீதியைக் கிளப்புகிறார்கள்..
பொருளாதார நிலை சிரமமாக இருக்கும் போதும், நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கவும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகி விடுகிறது. மக்கள் மீது சுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எந்த அரசுக்கும் இருக்காது. அதேசமயத்தில் மக்களின் எதிர்கால நலனை பாதுகாப்பதும், தேச நலனை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.
நமது தேசத்தின் நலனை பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய விஷயங்களை முன்வைத்து நமது பொருளாதாரத்துக்குப் பெரும் ஆபத்து என்பது போல் பீதியைக் கிளப்புபவர்களை நம்ப வேண்டாம். இப்போது எழுப்பப்படும் கவலைகள் அடிப்படையற்றவை.
1991ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினேன். அப்போது சிலர் இது குறித்து மக்களிடையே அச்சத்தைப் பரப்பினர்.
ஆனால், அவர்களால் தொடர்ந்து அம்முயற்சியில் வெற்றி காண இயலவில்லை. அதேபோல் இப்போதும் மக்களிடையே பீதியைக் கிளப்பும் முயற்சி பலிக்காது. குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களின் பேச்சை மக்கள் நம்ப வேண்டாம். டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாடு ஆகியவை தவிர்க்க முடியாத நடவடிக்கைகளாகும். நாட்டின் கடினமான பொருளாதார நிலைமையில் இவை அவசியமாகின்றன. வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நமது மக்களுக்கு இன்னல் தரக் கூடாதென்பதால், அதே அளவுக்கு இங்கு விலை உயர்த்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தாததால் எண்ணெய்த் துறை மானியமாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டி வந்தது.இந்த ஆண்டு அது ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். டீசல் விலையை உயர்த்தாவிட்டால் அது ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும்.
ரூ5 தான் உயர்வு
டீசல் வகையில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க அதன் விலையை ரூ.17 உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ. 5 தான் உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் விற்கப்படும் டீசல் பெரும்பாலும் பணக்காரர்களின் பெரிய கார்களுக்குத்தான் பயன்படுகிறது. அவர்களுக்குப் பயன், மத்திய அரசுக்குப் பெரும் நிதிப் பற்றாக்குறையா?












Click it and Unblock the Notifications