1077 என்ற எண்ணில் வடகிழக்கு பருவமழை குறித்த புகார் தெரிவிக்கலாம்: கரூர் கலெக்டர் ஷோபனா அறிவிப்பு
கரூர்: வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை, 1077 என்ற இலவச டெலிபோன் எண்ணில் தெரிவிக்காலம் என்று கரூர் கலெக்டர் ஷோபனா அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா கலந்து கொண்டு பேசியதாவது,
வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை வெள்ளம் தொடர்புடைய புகார்களை தெரிவிக்க, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் மழையளவு மற்றும் சேத விவரங்களை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
வெள்ளத்துக்கு இலக்காகும் பகுதிகளை வருவாய்த்துறை, பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, நங்காஞ்சியாறு ஆகிய ஆறுகளின் நீர்வரத்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் வெள்ள காலங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அதே போல் உணவு பொருள் வழங்கல் துறையினர் அத்தியாவசியப் பொருட்களை போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் தொற்று நோய்களை கண்காணிக்கவும், உரிய மருத்துவ வசதிகள் செய்யவும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவ பணியாளர்களை நியமித்தும், உயிர் காக்கும் மருந்து பொருட்களை போதுமான அளவில் இருப்பில் வைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பருவமழை காரணமாக பாதிக்கப்படும் பொது மக்களை பாதுகாக்கவும், தங்க வைக்கவும், பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications