இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 5.5% ஆக குறைத்த ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்!

முன்னதாக இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) 6.5 சதவீதமாக இருக்கும் என்று இந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இந் நிலையில் இன்று அதை 5.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்களால் இந்தியாவால் 6.5 சதவீத வளர்ச்சியை எட்ட முடியாது என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் தெரிவித்துள்ளது.
பருவ மழை பொய்த்துவிட்டதால், இந்தியாவின் வேளாண்துறை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், ஒரே நேரத்தில் 20 மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படுத்திய தாக்கத்தால் சர்வதேச முதலீட்டாளர்களிடையே இந்தியாவில் முதலீடு செய்வது குறித்த தயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி நீடிப்பதாலும், அமெரிக்க பொருளாதார மீட்சியில் மந்தமான நிலை நிலவுவதாலும், சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்துள்ளதும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் கணித்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்த பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த வாரம் டீசல் விலையை உயர்த்தியதோடு, சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தைக் குறைத்தது மத்திய அரசு.
மேலும் சில்லறை வணிகத்திலும், விமானத்துறையிலும், தகவல் ஒளிபரப்புத் துறையிலும், மின் வினியோகத்துறையிலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் உத்தரவையும் பிறப்பித்தது நினைவுகூறத்தக்கது.
இந்த மாதத் துவக்கத்தில் இன்னொரு தர மதிப்பீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 5.8 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாகக் குறைத்தது. அதே போல எச்எஸ்பிசி 6.3 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைத்தது. ஸ்டாண்ட்ர்ட் அண்ட் சார்ட்டட் 6.2 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாகக் குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications