பந்த் நடத்தி அரசால் மூடப்பட்ட மதுக்கடையை திறக்க வைத்த கேரள 'குடி'மகன்கள்
கோட்டயம்: கேரளாவில் மூடப்பட்ட மதுக்கடையை திறக்கக் கோரி குடிமகன்கள் நடத்திய பந்த் போராட்டத்திற்கு உடனடி பலன் கிடைத்துள்ளது. கலெக்டர் உத்தரவுபடி மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது மணிமலை கிராமம். இக்கிராம குடிமகன்கள் 15 கிமீ தொலைவிலுள்ள பாப்பாக்குடி சென்று மது குடித்து வந்தனர். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசு சில மாதங்களுக்கு முன்பு மணிமலையில் மதுக்கடையை திறந்தது. இந்நிலையில் சில சமூக நல அமைப்புகளால் இவர்களின் தலையில் இடி விழுந்தது. மதுக்கடையால் அப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று கூறி கடை முன்பு அவை போராட்டம் நடத்தின. கடையை மூடாவிட்டால் சாகும் வரை போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தன. இதனால் மணிமலை கடையை மூட கலெக்டர் உத்தரவி்ட்டார்.
இந்த உத்தரவினால் மணிமலை குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மணிமலை கடை மூடப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த குடிமகன்கள் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி பந்த் நடத்த தீர்மானித்தனர். இதற்கு அப்பகுதி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆதரவு அளித்தனர். நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் இரவு வரை மணிமலையில் பந்த் நடத்தப்பட்டது. அப்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.
இந்த பந்த்துக்கு உடனடி பலன் கிடைத்துள்ளது. மதுக்கடையை திறக்கும்படி கோட்டயம் மாவட்ட கலெக்டர் மினி ஆண்டனி உத்தரவிட்டார். இதையடுத்து மதுக்கடை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் மதுக்கடை இதற்கு முன்பு இருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தலாம் என்பதால் நேற்று அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications