மறுபடியும் ராஜபக்சேவை அழைத்தால் லட்சம் பேருடன் பிரதமர் வீடு முற்றுகை-வைகோ

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வந்த ராஜபக்சேவை எதிர்த்து ம.பி.க்குச் சென்று ஆயிரம் மதிமுக தொண்டர்களுடன் மாபெரும் போராட்டம் நடத்தினார் வைகோ. ம.பி. எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டாலும் இரவு பகல் பாராமல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய மதிமுகவினரை நாடு முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு போராட்டம் அமைந்தது. போராட்டத்திற்குப் பின்னர் வைகோ தலைமையில் தொண்டர்கள் நேற்று சென்னை திரும்பினர்.
முதலில் காலையில் திரும்புவதாக இருந்தது. ஆனால் ஆந்திராவில் பெய்த கன மழையால் பயணத்தில் தாமதம் ஏற்பட்டு மாலை 6 மணிவாக்கில்தான் வைகோ உள்ளிட்டோர் திரும்பினர். அவர்களுக்கு பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணா சதுக்கம் வந்த வைகோ அங்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
வைகோ பேசுகையில்,
மத்தியபிரதேசம் சாஞ்சிக்கு வந்த ராஜபக்சேவுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவதற்காக சென்னையில் இருந்து பெரியார் பிறந்த தினத்தன்று புறப்பட்டு சென்றோம். ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து தீயிட்டு கொண்ட விஜயராஜ் இறுதி மூச்சு உள்ளபோது, கொடியவன் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதீர்கள் என்று தன் கருத்தை பதிவு செய்துவிட்டு இறந்தான்.
அதே வீரத்தோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் 36 மணி நேரம் பயணித்து மத்திய பிரதேசத்தை அடைந்தோம். பகல், இரவு கடந்து பாஜக பலம் வாய்ந்த இடத்திலேயே மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் குற்றம் சாட்டினேன்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நாங்கள் மத்தியபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டோம். உடனே அங்கேயே தோழர்களுடன் அமர்ந்து அமைதியான வழியில், ஆனால், வீரத்தோடு இரவு பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அங்கு உணவு தயாரிக்க முடியவில்லை, அனைத்தையும் போலீசார் காலி செய்துவிட்டனர்.
ஆனால், அந்த பகுதி மக்கள் கருணை உள்ளவர்கள், உணவு, தண்ணீர் தந்து உதவினார்கள். வெயிலிலும், கொட்டும் பணியிலும் அங்கேயே அமர்ந்து போராடினோம். எங்களை கைது செய்து கொண்டு சென்ற இடமெல்லாம் வழிநெடுகிலும் மக்களும், கட்சியினரும், கட்சி சார்பற்றவர்களும் திரண்டு வரவேற்றனர்.
இங்கிருந்து எவ்வளவு வீரத்தோடு சென்றோமோ, அதை விட ஆயிரம் மடங்கு நெஞ்சில் பலத்தோடு திரும்பி வந்திருக்கிறோம். நான் சாதாரணமானவன். எம்.பி.யும் அல்ல, எம்.எல்.ஏ.வும் அல்ல. தனிப்பட்ட முறையில் நான் மன்மோகன்சிங்கை மதிக்கிறேன். ஆனால், ராஜபச்சேவை இந்தியாவில் அனுமதிக்கும் பிரதமரை கண்டிக்கிறேன்.
ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து, இங்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று ஐ.நா.வின் மனித உரிமை கமிஷனிடம் நாடகமாகிறதா? இன்னொரு முறை மீண்டும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்தால் பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம். முற்றுகையிடுபவர் எண்ணிக்கை லட்சமாக இருக்கும்.
எங்கள் ரத்தத்தை சிந்த தயாராக இருக்கிறோம். இதுவே கடைசியாக இருக்கட்டும். இலங்கையில் நடந்த படுகொலைகளை கொண்ட குறுந்தகட்டை அனைத்து மாநில மொழியிலும் உருவாக்கி வழங்குவோம். முதலில் கொல்கத்தா, சண்டிகர், ஸ்ரீநகர், லக்னோ, மும்பை என ஒவ்வொரு பகுதியாக வரிசையாக சென்று தமிழர்கள் கொல்லப்பட்டதை தெரிவிப்போம்.
மதிமுகவின் போராட்டத்தில் தமிழனின் உணர்ச்சி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஈழத்தின் விடியலே எங்கள் இலக்கு, அது நடந்தே தீரும். இதை வென்றெடுக்க அனைத்து வழியிலும் போராடுவோம். மது, ஊழல், வன்முறை இல்லாத அரசியலை வழி நடத்திச்செல்ல பேரறிஞர் அண்ணா எனக்கு பலம் அளிக்க வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications